வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண் டும் என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு நேற்றுக் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதையடுத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் முன்னயை துறைகளை அவருக்கு ஒதுக்கியதன் அடிப்படையில் 5 அமைச்சர்கள் கொண்ட மாகாண அமைச்சர் வாரியத்தின் விவரத்தைத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரியுள்ளார் என அறிய முடிகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது.
முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தம்மைப் பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து கட்டளை வழங்கியது. அந்தக் கட்டளை, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கட்டளை நேற்றுக் காலை கிடைத்தது.
டெனீஸ்வரனின் துறைகளில், போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன்வசம் எடுத்துக்கொண்டார். விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் மீன்பிடி அமைச்சும் இணைக்கப்பட்டு அமைச்சர் கந்தையா சிவநேசனுக்கு வழங்கப்பட்டது.
மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் -தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் வர்த்தக வாணிபத்தை இணைத்து அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டது.
தற்போது டெனீஸ்வரன் மீளவும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டால் அமைச்சர் ஒருவர் பதவி விலகவேண்டும்.
5 அமைச்சர்களாக மாற்றம் செய்யும் வரையில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண அமைச்சரவை இயங்க முடியாது. அமைச்சரவையினை 5 பேராக மாற்றும் பொறுப்பு நீதிமன்ற ஆணையின்படி ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளதனால் அதனை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெனீஸ்வரன் உள்ளடங்களாக ஏனைய அமைச்சர்களின் பெயரை உடனடியாக பரிந்துரைகுமாறு முதலமைச்சரை தற்போது ஆளுநர் கோரியுள்ளார்.