ஜனாதிபதியை சந்தித்ததை ஒப்புக்கொண்டார் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்றிரவு, ஜனாதிபதி செயலகத்துக்கு தாம் சென்றதை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டத்திற்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்துள்ளதாக லங்காதீப சிங்கள நாளிதழ் நேற்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டு, அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட போது, ஜனாதிபதி செயலகத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் இருந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தாம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்ததை கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதில், கடந்த 9ஆம் திகதி இரவு தான் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றது உண்மையென்றும் அங்கு மஹிந்த தேசப்பிரிய இருந்ததைக் கண்டதாகவும் எனினும், சரத் என் சில்வா அங்கு இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தான் அன்று சந்தித்த போதும், நாடாளுமன்றக் கலைப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தானும், இத்தபனே தம்மாலங்கார தேரரும் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் கூறியதாகவும், அதற்கு இணங்கியிருந்த அவர், திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இது தம்மை ஏமாற்றிய நடவடிக்கை எனவும் அந்த அறிக்கையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila