ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட சர்வகட்சி கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி சற்றுமுன்னர் முடிவடைந்துள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி கூட்டத்தில் ரணில் பங்கேற்பு! (2ஆம் இணைப்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ள சர்வகட்சி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளபோதிலும் மக்கள் விடுதலை முன்னணி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இதேவேளை குறித்த விசேட கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.