“ஜனவரி 8ஆம் திகதி, குண்டர்கள்,போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவாகள், கொலைகாரர்கள் என அனைத்து தீய சக்திகளுக்கும் தீர்ப்பளிக்கப்படும்”
அம்பாந்தோட்டையில் ஞாயிற்றுக்கிழமை எதிரணியினர் மீது தாக்குதலை மேற்கொண்டதன் மூலமாக தங்கள்யார் என்பதை வெளிப்படுத்தியதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கும்,அதன் மாகாண அளவிலான குண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பொது எதிரணி தெரிவித்துள்ளது.
அதன் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய தேதிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கருஜெயசூர்ய இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் மாற்றம் ஏற்படுவது எவ்வளவு அவசியமானது என்பதை அவர்கள் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் சக்திகளை இந்த வன்முறைகளும், மிரட்டல்களும் தடுத்துநிறுத்தப்பபோவதில்லை,எதிரணிக்கு நிலைமை சாதகமாக உள்ளதை ராஜபக்ச அரசாங்கம் உணர்ந்துள்ளது. நேர்மையான சக்திகளின் இயக்கத்திற்கு மக்களின் ஆதரவுள்ளதை அது புரிந்துகொண்டுள்ளது, மனநோயாளர் விடுதிகளிலிருந்து தப்பிவந்த குண்டர்கள், மனநோயாளிகள் போன்று அரசாங்கம் செயற்படுவதற்கு இதுவே காரணம்.
ஜனவரி எட்டாம் திகதி இது முடிவிற்கு வரும்,குண்டர்கள்,போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவாகள், கொலைகாரர்கள் என அனைத்த தீய சக்திகளுக்கும் அன்றைய தினம் தீர்ப்பளிக்கப்படும். ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்க முடியாத நீதியை மக்கள் வழங்குவார்கள்,
எதிரணியினரின் பிரச்சார கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை இலக்குவைத்து சமீபத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக சூழல் இல்லாதைபுலப்படுத்துகின்றது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலை அம்பாந்தோட்டை மாநகர முதல்வரே முன்னின்று நடத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


