ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஐ.நா ஆணையாளரின் யாழ் வருகையின்போது, காணாமல் போன தமது உறவினர்களது புகைப்படங்களை ஏந்தியவாறு வடக்கு முதல்வர் காரியாலயத்திற்கு முன்பாக உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து காணாமல் போனோரது உறவினர்களை சந்தித்த ஐ.நா ஆணையாளர், தாம் இன்று அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் காணாமல் போன தமது உறவுகள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் அறியாத உறவினர்கள், ஐ.நா ஆணையாளரை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.