இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியில் இராணுவத்தினரால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழ் மக்களின் கொலைக்களங்களாகவே இருந்தன என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆட்களைப் பதிவுசெய்தல் திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எதுவும் அறியாத மக்கள் இராணுவத்தினரின் பொறிக் கிடங்குக்குள் சிக்கவைக்கப்பட்டு கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டார்கள் எனத் தெரிவித்த அவர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்த அரசாங்கம் அம்மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேசமும் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதெனத் தெரிவித்த அவர், வெறும் அறிக்கைகளாக வந்த பாதுகாப்பு வலயங்கள் கொலைக்களங்களாக மாற்றம் பெற்றன எனவும் தெரிவித்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கையில் கிடைத்ததை மட்டுமே கொண்டோடிய மக்கள், தமது பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் உட்பட பலவற்றை இழந்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்காலில் பிறந்த பல குழந்தைகள் இன்னமும் பிறப்புச்சான்றிதழ்கூடப் பெறமுடியாத நிலையிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளதுடன், புதிதாகக் கொண்டுவரப்படப்போகும் சட்டம் எவ்வாறு இம்மக்களுக்கு உதவப்போகின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்?


