
பிரித்தானியாவில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது – தொங்கு பாராளுமன்றம் அமையவுள்ளது:-
பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம் உருவாகக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.
நேற்றைய தினம் பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க 326 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.
பிரித்தானிய பிரதமர் திரேசா மே முன்கூட்டியே தேர்தலை நடத்தியிருந்தார்.
திரேசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் ஆட்சி அமைப்பதற்கு போதியளவு ஆசனங்கள் கிடைக்கவில்லை.
இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சி 314 ஆசனங்களையும், தொழிற்கட்சி 261 ஆசனங்களையும், ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி 35 ஆசனங்களையும், லிபரல் டெமோக்ரட்டிவ் 12 ஆசனங்களையும், டெமோக்கிரட்டிவ் யூனியனிஸ்ட் பாட்டி 10 ஆசனங்களையும், ஏனையவை 13 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இதன் மூலம் 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றில் எந்தவொரு தனிக்கட்சியும் ஆட்சி அமைக்கும் பெரும்பலத்தை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்னமும் எட்டு ஆசனங்கள் தொடர்பிலான முடிவுகளே வெளியிடப்படாது எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிடெக்ஸின் பின்னர், திரேசா மே இந்த தேர்தலை முன்கூட்டியே நடத்தியிருந்தார்.
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத காரணத்தினால் மே பதவி விலக வேண்டுமென பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் கோரியுள்ளார்.
எனினும், பதவி விலக வேண்டியதில்லை எனவும் பிரித்தானியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமெனவும் மே பதிலளித்துள்ளார்.
தமது கட்சிக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளதகாவும் கூடுதல் ஆசனங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய வகையில் முடிவுகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


