வடக்கு, கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் வருகை தரவுள்ள நிலையினில் காணாமல் போனோரது பாதுகாவலர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களென பலரும் எதிர்ப்பு போராட்டங்களினில் குதிக்கவுள்ளனர். பொது எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஸஷ தலைமையிலான குழுவினரே வருகை தரவுள்ளனர்.
இறுதி யுத்த காலத்தினில் வெள்ளைகொடி சகிதம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சியமாக பஸில் ராஜபக்ஸவே உள்ளார்.
எதிர்வரும் 21, 22, 23 ஆம் திகதிகளில் பஸில் ராஜபக்ஸ தலைமையில் முன்னாள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் முக்கியஸ்தர்களே வருகை தரவுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நாடு தழுவிய ரீதியில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட மாகாண சபைத் தேர்தல்களும் அடுத்த வருடம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவே பொது எதிரணியைச் சேர்ந்த குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதனிடையே அண்மையினில் ஈபிடிபியினிலிருந்து வெளியேறிய குழுவொன்று பஸில் தலைமையிலான கட்சியினில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.