பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தாம் பதவிவிலகுவதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.
குறித்த கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் பிரித்தானியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமாரி விஜேவர்தன உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவிருக்கின்ற நிலையிலேயே அவர் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரித்தானிய தூதரகத்திற்கான பாதுகாப்பு பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில் உயர்ஸ்தானிகரது பதவி விலகல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.