வடக்கு மாகாண சபையின் 26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகம் ஒன்றிற்கு நான் வழங்கியுள்ள செவ்வியில் உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி மாலை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் சிலருடன் கொழும்பில் சந்தித்தேன். அதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள இராணவ முகாம்களை அகற்றப்போவது இல்லை என மகாநாம தேரர்களிடம் கூறப்போவதாக ரணில் என்னைப் பார்த்து கூறியது 100 வீதம் உண்மை .
ஆனால் அவர் தான் கூறவில்லை என தற்போது கூறுவாராக இருந்தால் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்களை அகற்ற அவர் தற்போது சம்மதிக்கின்றாரா என்று அறியத்தர வேண்டும். யாழ்.வந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன படைமுகாம்களை அகற்ற முடியாது என கூறியமை தொடர்பில் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்தமையினாலேயே பிரதமருடனான சந்திப்பு பற்றி பேசவேண்டி வந்தது.
இராணுவம் பற்றி தான் எதுவும் கூறவில்லை என ரணில் கூறுவாரானால் இராணுவத்தினை வெளியேற்றுவதில் பிரதமரின் நிலைப்பாட்டில் வித்தியாசம் இருப்பதுபோல தெரிகின்றது. எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவேன் என்று பிரதமர் கூறினால் இங்குள்ள மக்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.