இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான வளம் இலங்கையின் நீதித்துறையில் உள்ளதென குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளீர்ப்பதற்கு அவசியம் இல்லை என மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டின் மறுசீரமைப்பு விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் இருந்து ஐயாயிரம் ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.