எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்ல விடமாட்டோம்! - விக்னேஸ்வரன்


வடமாகாண மக்களுக்குக்கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதேநேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண மக்களுக்குக்கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதேநேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
“நாங்கள் எதனையும் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க காணிவேண்டும் என்று கேட்டார். நாங்கள் மண்டைதீவில் காணியை அடையாளப்படுத்தி எங்கள் மற்றைய அலுவலர்களுடன் சென்று எனது பிரத்தியேகச் செயலாளர் காணியைக் காட்டினார்.
பின்னர் காணியைத் தமக்குமாற்றித் தரும்படிகேட்டார். அதற்கு நான் இசையவில்லை. நாம் இந்த செயற்றிட்டத்தை பங்குதாரர்களாகச் செய்வோம் என்றேன். அப்படியில்லை. வெளிநாட்டில் இருந்து கோடி கணக்கான பணம் கிடைக்கப் போகின்றது. ஆகவே காணியை எமது பெயருக்கு மாற்றினால் தான் அவர்களுடன் பேசி பணம் பெறமுடியும் என்று கூறினார்.
நாங்கள் தானே நன்மை அடையப்போகின்றவர்கள். எம்முடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தினால் தான் பொருந்தும் என்றேன். ஏற்கனவே இவ்வாறான கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் வேறு இடங்களில் கட்டப்பட்டு அவை போதுமானவாறு பாவிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை.அவை சம்பந்தமாக பலவிதமான குற்றச்சாட்டுக்களையும் பலர் கூறக்கேட்டுள்ளேன். ஆகவேதான் எமது கட்டுப்பாட்டுக்குள் இந்தச் செயற்றிட்டம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
பலமாதகாலம் இது பற்றி எதுவும் அவர் பேச முன்வரவில்லை. மிக அண்மையில் ஆளுநருடனும் யாழ். அரசாங்க அதிபருடனும் அதே காணியைப் பார்க்கப் போயிருந்ததாகப் பத்திரிகையில் வாசித்தேன். காணியை விடுவிக்க அவர்கள் என்னிடம் வரவேண்டும் என்றபடியால் நான் வாளாதிருக்கின்றேன். இவ்வாறான நடவடிக்கைகள் உங்களுக்கு எமது புறக்கணிப்பாக எடுத்துக் கூறப்பட்டதோ எனக்குத் தெரியாது.
நாங்கள் சில தருணங்களில் வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறலுக்கு மதிப்பளித்தும் நடவடிக்கைகளைக் கொண்டு நடாத்த முற்பட்டால் அது அரசாங்க உறுப்பினர்களையும் தான் ,தனியார் துறையினரையும் தான் சற்று பின் வாங்க வைக்கின்றது. காரணம் பலர் பிழையான நடவடிக்கைகளுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். வெளிப்படைத் தன்மையை புறக்கணிக்கின்றார்கள். அதற்கான காரணத்தை யூகிக்கலாம்.
தனிப்பட்ட நன்மைகளைப் பெற தரப்பார் ஏங்குகின்றார்கள் என்பதே காரணமாக இருக்க முடியும்.ஆகவே வடமாகாண மக்களுக்குக்கிடைக்கும் உதவிகளைப் புறக்கணிக்க நாங்கள் மக்கள் கரிசனை அற்றவர்கள் அல்ல. அதேநேரத்தில் எம்மை வஞ்சித்து சுரண்டிச் செல்லவும் விடமாட்டோம்.இது விடயமாக வேறு சிலவிடயங்களை இத்தருணத்தில் கூறவேண்டியுள்ளது. உதாரணத்திற்கு நேற்று வெளிவந்த தமிழ் பத்திரகை ஒன்றில் 'வடகிழக்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும்' என்ற தலையங்கத்தின் கீழ் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடகிழக்கு மக்களுக்கு நன்மை பயப்பதான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
அதைக் கவனமாக வாசித்துப் பார்த்தால் யாருக்கு இந்த உதவிகளை பெற்றுக் கொடுக்க அவர் விருப்பமாக இருக்கின்றார் என்பது புரியும். மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிபெறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மொரகஹகந்ததிட்டம் பல வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால் மகாவலி நதியின் ஒரு சொட்டுநீர் கூட வடமாகாணத்திற்கு இதுவரை வரவில்லை. ஆனால் வரவிருக்கும் நீரைமேற்கோள் காட்டி 'எல்'வலயம் என்ற வலயத்தைத் திறந்து அங்கு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.
ஆகவே வடகிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டதாயினும் வடகிழக்கில் உள்ள சிங்கள பலவந்தக் குடியேற்றவாசிகளின் நன்மையையே அது குறிக்கின்றது. இன்னொன்றைக் கூறுகின்றேன். பலவிதமான பிரச்சனைகளை எங்கள் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அண்மையில் ஒரு அமைச்சர் வன்னியில் 600 ஏக்கர் காணியை திறந்த மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விட வேண்டும் என்று கேட்டிருந்தார்.
யானைகளின் நடைபவனிப் பாதைசெல்லும் வழியை ஆராய வேண்டியிருந்தது. வன மிருகங்கள் இவ்வாறான சவாரிகள் அமைப்பதால் சுற்றியுள்ள கிராமமக்களுக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விடயம் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் பரிசீலிக்காது யாரோ கேட்டார் என்பதால் நாம் கொடுக்க முன்வந்தால் அதில் எங்காவது சில சிக்கல்கள் ஒளிந்து கொண்டிருக்கும். ஆகவே எனது தாமதம், நான் அவர்கள் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன் என்று அமைச்சரை வெளிப்படையாகக் கூறவைத்தது.
அடுத்து இன்னுமொருநிகழ்வு. சிலவருடங்களுக்கு முன்னர் மத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒருவர் உரிய அறிக்கைகளைப் பெறாது, தக்கதா அந்தச் செயற்றிட்டம் என்பதை ஆராயாமல் எமது தீவகப் பகுதியில் 30 தட்டுகளுக்கும் மேலான அடுக்கு மாடிக் கட்டடத்தை சுற்றுலா உணவகத் தங்குமிடத்திற்காக தேர்ந்தெடுத்து அஸ்திவாரமும் வெட்டத் துணிந்தார்.அதிர்ஸ்ட வசமாக எமது அப்போதைய அமைச்சர்களுக்கு அது தெரியவந்து அந்தச் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடத்தை எமது தீவுகளில் கட்டமுயன்றால் தீவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை நாம் மிக உன்னிப்பாக ஆராய வேண்டும்.
பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.அரசாங்கம் வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில் செயற்றிட்டங்களை வடமாகாணத்திற்கு வகுக்கின்றார்கள். அதுதவறு. எமது சுற்றுச் சூழல், கலை கலாச்சாரப் பின்னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும்.
இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது.எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்து தமக்கு தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது.
பதவி இருந்தால் எதையும் செய்யலாம் என்ற தப்பான அபிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின் பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு.செலவைக் குறைக்க சில ஒப்பந்தக்காரர்கள் குறைபாட்டுடன் பள்ளிக் கூடக் கட்டடங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். சில வருடங்களில் அவை பழுதடைந்து வீழ்ந்து சில நேரங்களில் குழந்தைகளின் உயிர்களையும் பறித்துவிடுகின்றன.
நாம் வருங்காலத்தை யோசிக்காது உடனே கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்தோமானால் அது பல சிக்கல்களை எமக்கு உண்டாக்கும். அரசாங்க உதவிகளை நாங்கள் இன்னொரு கண்கொண்டும் நோக்க வேண்டியுள்ளது.பெரும்பான்மை அரசாங்கங்கள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாக தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு.
தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சனைகளைத் தீர்த்திருக்கும்.தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு நிறுவனத்தின் பணத்தை எமக்குச் செலவழிக்க முன்வருவார்கள்.
உதாரணத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணத்தைத் தருவதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு அந்தப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறி தாம் எமக்காகக் கடன் பட்டுள்ளதாக கூறுவார்கள். ஆனால் எமது உரிமைகள் எவற்றையும் தர மறுப்பார்கள். ஆகவே தரவருபவர்களின் தானத்தின் தாற்பரியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது உரித்துக்களைத் தராது விடுத்து எமக்கு பொருளாதார உதவிகள் பலதையும் அளித்து எம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதை எமது மக்கள் விரும்புகின்றார்களா என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
என்னைப் பொறுத்தவரையில் எமது உரிமைகளே முதன்மையுடையது. மற்றவை யாவும் பின் செல்பவை. உதவிகள் பெற்றுக்கொண்டால் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டு விடுகின்றோம். அதன் பின் சிங்களக் குடியேற்றம், படையினர் தொடர் வசிப்பு, மீன்பிடியில் தென்னவர் ஆக்கிரமிப்பு என்று பலதையும் நிரந்தரமாக்கி விடுகின்றார்கள்.
நாம் பேசாமடந்தைகளாக கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோம். எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை. மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளைநாம் பெற்று வருகின்றோம். மேற்கூறிய எனது கருத்துக்களே நான் மத்தியின் உதவிகளைப் புறக்கணிக்கின்றேன் என்று கூற வைத்திருக்க வேண்டும். நான் புறக்கணிக்கவில்லை. நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன்.
அவ்வளவுதான். தென்னாபிரிக்காவில் முதலில் அரசியல் பிரச்சனைகளைத் தீர்த்தார்கள். அதன் பின்னரே உண்மைக்கும் நல்லுறவுக்குமான ஆணைக்குழுவை அமைத்தார்கள்.நாம் முதலில் எமது உரித்துக்களை உரியவாறு பெற்றுக் கொள்ளாது விட்டால் காலக் கிரமத்தில் 'உங்களுக்குநாம் அது தந்து விட்டோம் இது தந்து விட்டோம்' என்று கூறிமேலும் எதுவும் அரசியல் ரீதியாகத் தரமுடியாது என்று கைவிரித்து விடுவார்கள். அரசாங்கங்களோ தனியார்களோ கொண்டு வரும் சகல செயற்றிட்டங்களையும் உன்னிப்பாக கவனித்தே நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.” என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila