புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட புடவை அணிந்திருந்ததாகக் கூறி பெண் ஒருவருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத குறித்த பெண் அதிர்ச்சியடைந்தார். இந்தியாவில் இருந்து வாங்கி வந்த புடவை ஒன்றை அணிந்து தனது கணவருடன் வெள்ளவத்தையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர் ஒருவரின் உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற தமிழ் தம்பதிகளை கடை உரிமையாளர் சற்று வித்தியாசமாக பார்த்துள்ளார். இதைச் சற்றும் கணக்கில் கொள்ளாமல் உள்ளே சென்று அவர்கள் உணவு உட்கொண்டுள்ளனர்.
இதன்போது திடீரென பொலிஸார் அந்த உணவகத்துக்கு வந்துள்ளனர். கடை உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அங்கு வந்துள்ளனர்.
உடனடியாகப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த பெண்ணை பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.
நடப்பது ஒன்றும் அறியாமல் அதிர்ச்சிக்குள்ளாகிய கணவர் ஏன் எனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றீர்கள் என பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு உங்களின் மனைவி அணிந்திருக்கும் புடவை தான் என பொலிஸார் கூறியுள்ளனர்.
புடவையா? புடவை அணிந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை எனக் கணவர் கேட்டுள்ளார். புடவை அணிவதால் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆனால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் புடவையில் எமது புத்த பெருமானின் படங்கள் உள்ளன. இந்த செயல் மதத்தை நிந்திக்கும் செயலாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போதே தனது மனைவி அணிந்திருந்த புடவையை சற்று உற்று நோக்கியுள்ளார் கணவர். ஆனால் பொலிஸார் கூறிய வகையில் புத்த பெருமானின் புகைப்படம் அதில் இருக்கவில்லை.
அந்த புடவையில் பொம்மை படமே காணப்பட்டுள்ளது. அந்த படம் சற்று புத்த பெருமானை போன்று தென்பட்டுள்ளது.
எனினும் பொலிஸார் குறித்த பெண்ணை வெள்வத்தை பொலிஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று புடவையை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர் கணவர் வீட்டுக்கு சென்று வேறு ஒரு உடையை எடுத்து வந்து தனது மனைவியிடம் கொடுத்து உடையை மாற்றுமாறு கோரியுள்ளார்.
பொலிஸ் நிலையத்தினுள் வைத்தே உடையை மாற்றிய பின்னர் புடவையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் உடை அணிந்தார் என குற்றம் சுமத்தி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
தான் மதத்தை நிந்திக்கும் வகையில் செயற்படவில்லை. நான் அனைத்து மதத்தையும் மதிப்பவள். இலங்கையில் இவ்வாறான புடவைகளை அணியக் கூடாது எனத் தனக்கு தெரியாது.
எனவே தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என குறித்த பெண் கூறியுள்ளார்.
எனினும் இதனைக் கேட்க மறுத்த பொலிஸார் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.