நாட்டில் தற்போது இனநல்லிணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ‘சிங்க லே’ அமைப்புத் தடைசெய்யப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கையினை பொலிஸ்மா அதிபர் எடுக்க வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியம் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதன் தலைவர் சிசிர சி விதானகே இதனைத் தெரிவித்தார்.
இந்த அமைப்பினூடாக இனங்களுக்கிடையில், மோதல்கள் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள ‘சிங்க லே’ என்ற அமைப்பு நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினையைத் தூண்டும் வகையில் செயல்படுகிறது. அதன் இலச்சினைகள் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.
ஆனால், இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். அத்துடன், அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கு நன்மை கிடைப்பதை ஒருபோதும் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் விரும்பமாட்டார்கள். அவ்வாறு நடந்தால் அதன்பின்னர் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கு முடியாமல் போகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.
அன்றிருந்த ஆட்சியாளர்கள் 1956இல் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியை தேடிப்பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் 30 வருட யுத்தம் நாட்டில் ஏற்பட்டிருக்காது.
அதேபோன்றே தற்போது இனப்பிரச்சினையைத் தூண்டும் வகையில் செயல்படும் ‘சிங்க லே’ என்ற அமைப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இதற்கு எதிராக ‘கொட்டி லே’ (புலிகளின் இரத்தம்) ‘மரக்கல லே’ என்ற பெயர்களிலும் அமைப்புக்கள் உருவாவதைத் தடுக்க முடியாது போய்விடும்.
நாட்டில் இனப்பிரச்சினையைத் தூண்டும் வகையில் உருவாகும் அமைப்புக்கள், இலச்சினைகள் ஆகியவற்றைத் தடைசெய்ய பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதில் எந்தப் பயனும் இல்லாம்போகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.