லைக்கா ஒரு புலி நிறுவனம்: மஹிந்த ஆதரவுப் பேரணியில் விமல் காட்டம்!
இலங்கை அரசுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ சார்பு எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டப்பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இப்பேரணிக் கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் லைக்கா குழும நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனம் என குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பான லைக்காவிற்கு லங்கா வைத்தியசாலையின் பங்குகள் அளிக்கப்பட்டமை நாட்டின் சொத்துக்களை புலிகளுக்கு கொடுத்தது போன்றது என்று அவர் தெரிவித்தார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்படுத்தி தருவதாக அவர் விசனம் தெரிவித்தார். நல்லாட்சி அரசு என்று சொல்லிக் கொள்வோர் புலம்பெயர் விடுதலைப்புலி அமைப்பான லைக்காவிற்கும் அதையொத்த ஏனைய புலி அமைப்புக்களுக்கும் இலங்கையில் காலூன்ற அனுமதி தருவதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தி உள்ளார். விடுதலைப் புலிகளை அழித்து நாட்டுக்கு நிம்மதி தந்த மகிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் ஆட்சி கையளிக்கப் படவேண்டும் என அவர் தனது உரையில் வலியுறுத்தினார். இன்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவுப் பேரணியில் மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, ரோகித்த அபேகுணவர்த்தன, குமார வெல்கம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Post:
Add Comments