
கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தென் இலங்கை ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருனாதிலகவுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற சந்திப்பின் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். ஊடகத்துறை அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சுமார் 40 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களில் நால்வர் சிங்களவர்கள் என்றும் ஏனையவர்கள் தமிழர்கள் என்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றிய செயலாளர் பாரதி இராசநாயகம் தனது கவனத்துக்கு கொண்டுவந்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில், லசந்த விக்கிரமதுங்க மற்றும் எக்னலிகொட ஆகிய சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலை குறித்து விசாரணைகள் நடைபெறும் அதேவேளை நிமலராஜன், சுகிர்தராஜன், நடேசன் மற்றும் சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார். இவ்வாறு 35 சம்பவங்கள் விசாரணைகள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.