
இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டணம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த மன்னார் மாவட்டத்திலிருந்து வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட சுப்ரமணியம் சிவகரன் இன்று நண்பகல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். இந்த கைது மாத்திரமல்லாமல் கடந்த சில நாட்களில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல உத்தியோகப்பூர்வமான கைதுகளாக இல்லாமல் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது மிகவும் பாராதுரமான ஒரு விடயமாக காணப்படுகின்றது. இன்றைய கைது உட்பட இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது கடும் கண்டணத்தை தெரிவித்து கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.