யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்ற பெயரில் ஆளுநர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்துள்ளது. கூட்டத்தின் நோக்கம், திட்டம் என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்து கொள்வராயினும் அதற்கு யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்கூட்டம் என்பது கொடுக்கப்பட்ட தலையங்கம்.
பரவாயில்லை. நகர அபிவிருத்தி தொடர்பில் கூட்டம் வைப்பது நல்லது தானே என்றால் அந்தக் கூட் டத்திற்கு முதலமைச்சர் செல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
இது தவிர யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் கூட்டப்பட்ட தின் உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுவதும் நியாயமானதே.
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி பற்றிப் பேசும் போது அதில் வடக்கு முதலமைச்சரின் பிரசன்னம் மிகவும் அவசியம் என்பதுடன் அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் மட்டுமே அக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர அபிவிருத்தி என்பது எங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டியது. எனவே அது சார்ந்த கூட்டத்தை ஆளுநர் அலுவலகத்தில் நடத்துவது ஏன்? என்று வடக்கின் முதலமைச்சர் எழுப்புகின்ற வினாவை எவரும் எளிதில் புறக்கணித்து விட முடியாது.
ஆக, வடக்கின் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் சில இடங்களில் இருக்கக் கூடிய கருத்து ஒவ்வாமையைப் பயன்படுத்தி முதலமைச்சருக்கு எதிரானவர்கள் ஆளுநர் அலுவலகத்தில் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
இதன் மூலம் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தி, வடக்கு மாகாண அரசின் இயங்கு நிலைக்குப் பாதகம் செய்வது,
இவ்வாறு செய்வதன் மூலம் வடக்கு மாகாண சபை செம்மையாக இயங்கவில்லை என்றொரு குற்றச்சாட்டை முதலமைச்சர் மீது சுமத்த முடியும் என்பது கூட்டத்தை நடத்தியவர்களின் நோக்கம்.
ஐயா! அவ்வாறான நோக்கம் எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுவார்களாயின் நல்லது அதை ஏற்கலாம்.
ஆனால் நமக்கு எழும் சந்தேகம் எல்லாம் முதலமைச்சர் இல்லாமல்; வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய 38 உறுப்பினர்களில் 31 பேர் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டியது ஏன்? என்பதுதான்.
யாழ்ப்பாண நகரத்தின் அபிவிருத்தியில் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் வடக்கின் முதலமைச்சரையும் ஆளுநரையும் ஒற்றுமைப்படுத்தி வடக்கின் அனைத்து மாகாண சபை உறுப்பி னர்களும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர்களும் யாழ். அரச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர்கள் உள்ளடங்கியதான கூட்டத்தை கூட்டியிருந்தால், அந்தக் கூட்டத்தால் நன்மை விளைந்திருக்கும். இதைச் செய்யாதது ஏன்?
வடக்கின் முதல்வரையும் ஆளுநரையும் ஒற்று மைப்படுத்தி அவர்களை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவது நல்லதல்லவா? இதை விடுத்து முதலமைச்சரைப் புறம் தள்ளி, ஏழு மாகாண சபை உறுப்பினர்களுடனும் நான்கு எம்.பிக்களுட னும் கூட்டத்தை நடத்தியதை நகர அபிவிருத்திக் கூட்டம் என்று சொல்வதா? அல்லது முதல்வரை யும் ஆளுநரையும் கடுமையாகப் பகைக்கவைக் கும் கூட்டம் என்று சொல்வதா? என்பதை தமிழ் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.