தமிழர் மீது புதிய யுத்தத்தை திணிக்கும் முயற்சியில் வடக்கு ஆளுநர் : சிறிதரன் குற்றச்சாட்டு

நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களில் உள்ள ஆளுநர்கள் தமது கடமையை மாத்திரம் செய்துகொண்டு இருக்கும்போது, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தமது அதிகாரத்திற்கு அப்பாற்சென்று அபரிமிதமாக செயற்படுவதானது, தமிழர்கள் மீது மீண்டும் ஒரு யுத்தத்தை திணிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக வட மாகாண ஆளுநர் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து நாம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, முன்னாள் போராளிகளை சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கு அருகதையற்ற வடக்கு ஆளுநர், வெளியில் இருக்கும் முன்னாள் போராளிகளை இராணுவத்தில் சேருங்கள் என்று கூறி வருவதானது, நாட்டில் தமிழர்களை மீண்டும் அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் முயற்சியென குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், தமிழர்களை குருதிசிந்தும் சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளும் வடக்கு ஆளுநர் போன்றோரின் செயற்பாடானது, மிகவும் வேதனைக்கு உட்படுத்துவதாகவும் சிறிதரன் குறிப்பிட்டார்.
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவும், விடுதலைப் புலிகளை குற்றஞ்சாட்டுவதும், சில உதவிகளை வழங்குவதையுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நீதியான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வதாகவே அவர்களின் செயற்பாடு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன் அடிப்படையிலேயே தற்போது ஆளுநரும் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila