‘ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி’ சம்பந்தனின் புதிய கண்டுபிடிப்பு என்கிறார் கஜேந்திரகுமார்

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புதிய கண்டுபிடிப்பு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால கருத்துக்கள் குறித்து இன்று (புதன்கிழமை) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் போது, மன்னாரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ‘ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி தீர்வு’ என கருத்துப்பட கூறியிருந்தார். அவ்விடயம் தொடர்பான நிலைப்பாட்டினை ஊடகவியலாளர்கள் கேட்ட போதே கஜேந்திரகுமார் இவ்வாறு சாடினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், ‘சம்பந்தனின் புதிய கண்டுபிடிப்பு ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது. இது புதிய கண்டுபிடிப்பா? பழைய கண்டு பிடிப்பா? என்ற விவாதத்திற்கு இடமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் போது ஒரு வாக்குறுதியை அளித்து போட்டியிட்டனர். ஏனைய கட்சிகள் பொய் வாக்குறுதி அளிக்கின்றார்கள் என சொன்னாலும் கூட, தமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டி தீர்வு என்று ஆணித்தனமாக கூறி வாக்குகளைப் பெற்றார்கள். சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் சமஷ்டி தீர்வு என்றால், அதில் ஒரு தீர்வு மட்டுமே இருக்கின்றது. அதற்கு பலவிதமான தீர்வுகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. சமஷ்டியில் பல முறைகள் இருக்கின்றன. அதில் எந்த சமஷ்டி என்பது மிக முக்கியமானது. எவ்வளவோ அழிவுகளை சந்தித்த மக்கள், மீண்டும் அழிவுகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருக்க கூடாது என்பதனையே சுட்டிக் காட்டினோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சில், சமஷ்டி, சுயநிர்ணய உரிமை என்று சொன்னாலும் கூட, வெறுமனவே கோஷங்கள் தான். நடைமுறையில் ஒற்றையாட்சியை கேட்கப் போகின்றார்கள். கண்முன்னே ஏமாற்றப் போகின்றோம் என்று தான் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அது புதிய கண்டுபிடிப்பு. ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பதனை ஏன் தேர்தல் காலத்தில் சொல்லவில்லை. ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்ற விடயத்தினை 40 வருடங்களாக அரசியலில் இருக்கும் அரசியல்வாதிக்கு தெரியாதா?, நேற்று அல்லது நேற்று முன்தினம் வந்த விடயம் அல்லவே, ஏன் அவற்றினை தேர்தல் காலத்தில் சொல்லவில்லை? ஏன் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் சமஷ்டி தீர்;வு என ஒரே நேரத்தில் கூறினீர்கள். சுயநிர்ணய உரிமைக்குள் சமஷ்டி என்றால், ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்று கதைக்க முடியாது. எமது மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்;ற பாதைக்குள் கொண்டு செல்வதற்காக பேசப்பட்டுள்ளது. மக்களின் முகத்திற்கு சொல்லி, அவர்களை ஏமாற்றிக் கொண்டு செல்ல முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அப்படி பேசுவதற்கு துணிச்சல் வந்துள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு இவற்றினைப் புரிய வைத்து, வெளிப்படையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பாதையினை விளக்குவதற்கே முனைகின்றோம் என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila