தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளான முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தில் வசித்து வந்த கணவனும் மனைவியும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுச் சம்பவம், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7.30க்கு இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கேதீஸ்வரனும் அவரது மனைவியான வட்டக்கச்சியைச் சேர்ந்த சாவித்திரி ஆகியோரே ஒட்டுசுட்டான், சிவநகர்ப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கேதீஸ்வரன் ஒட்டுசுட்டான் நகர்ப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை, மனைவி வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கைதுக்கான காரணம் இதுவரைத் தெரியவரவில்லை. எனினும், முன்னாள் போராளி கேதீஸ்வரனின் தொலைபேசியில் சர்ச்சைக்குரிய காணொளி இருந்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அண்மைக்காலமாக முன்னாள் போராளிகள் திடீர் திடீரென கைது செய்யப்பட்டு வருவதோடு, இந்த கைதுகள் சட்டரீதியற்றவையாகவும் இடம்பெற்று வருகின்றது. இவை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிட த்தக்கது.