காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தனது அதி மேதாவித்தனத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கொத்துக் குண்டுகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கொத்தணி குண்டு பயன்பாடு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிடுகையில் :-
‘கொத்தனி ஆயுத சாசனத்தின் பிரகாரம் இந்த ஆயுதப் பயன்பாடு இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது உலகில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை.
மாறாக 2010 ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது. எனவே யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால் இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, மெக்ஸ்வல் பரணகம போன்ற நபர்களிடமிருந்து இவ்வாறான செயற்பாட்டை எதிர்பார்க்கவில்லை எனவும் இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை வலுப்படுத்தாது எனவும் கூறினார்.
அத்துடன், மெக்ஸ்வல் பரணகம அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், கொத்தணி குண்டு பயன்படுத்தப்பட்டதா? என்பதனை விசாரணை செய்ய அரசாங்கம் தயார் என்றும் கூறினார்.