கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படும் விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று, கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

எனினும், இதில் மூவர் தாம் கையெழுத்திடவில்லை என்று கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு பங்காளிக் கட்சியான ரெலோ கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இதனால் கூட்டமைப்புக்குள் குழப்பங்கள் அதிகரித்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில், ஜெனிவா காலஅவகாச விவகாரம் குறித்து காரசாரமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

எதற்காக, காலஅவகாசம் வழங்கக் கூடாது என்று தாம் கோரினோம் என்பதற்கு, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.

இதையடுத்து, கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்திக் கூறியிருந்தார்.

அத்துடன் இந்தக் கூட்டத்தில் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக கடுமையான கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, நாளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இந்த அவசர கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஜெனிவா தீர்மானம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஜெனிவா தீர்மானத்தை இறுக்கமான அனைத்துலக கண்காணிப்புடன் முழுமையான நடைமுறைப்படுத்தக் கோரும் மனு ஒன்றை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கான முடிவும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila