135-வது நாளாக தொடரும் நிலமீட்புப் போராட்டம் - அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் சந்திப்பு


முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் தொடர் போராட்டம் நேற்றுடன் 135 ஆவது நாளை எட்டி தொடர்ந்து வருகின்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக் குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமது சொந்த நிலத்தில் கால்பதிக்கும் எண்ணத்தோடு கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த தமது  தொடர் போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை  தாம் முன்னெடுக்கப்போவதாக மக்கள் உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் ஜனாதிபதியை விரைவில் சந்திக்கபோவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் புதுக்குடியிருப்புக்கு வருகைதந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதனிடம் இதுதொடர்பில் வினவியபோது,  

கேப்பாப்பிலவு மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி நூறு நாட்களுக்கு மேலாக போராடிவருகின்றனர். அவர்களுடைய காணிவிடுவிப்பு தொடர்பில் நாம் பலமுறை பேசியிருக்கிறோம். நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவந்து பேசினோம். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் கேப்பாப்பிலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்து சென்று ஜனாதிபதியுடனும் பிரதமரோடும் சந்திப்பொன்றை ஏற்படுத்தி அவர்களுடைய குறைகளை கேட்டறிய வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். 

அந்தவகையில் வருகின்ற நாடாளுமன்ற அமர்விலே கேப்பாப்பிலவில் போராடுகின்ற முக்கியமான சிலரை அழைத்து சென்று காணி விடுவிப்பு மேற்கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறேன்.

அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. அது நிச்சயமாக நிறைவு பெறவேண் டும். அந்தவகையில் நாங்கள் இந்த முயற் சியை  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் ஜனாதிபதி, பிரதமரோடு மக்களை அழைத்து சென்று அவர்களுடைய  சொந்த காணிகளை விடுவிப்பதற்கான முயற்சியை கைகூட வைக்கின்ற ஒரு முயற்சியாக அடுத்த வாரம் இதனை செய்ய இருக்கிறேன் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila