மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் போது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்குமார் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகின்து. இதற்கு மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும்.
ஆனால் இந்த நாட்டில் பௌத்த பிக்குகள் இதனை கடைப்பிடிப்பதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போதும் இந்த நிலைமை இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உட்பட மாகாண முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.