அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜாவே போட்டியிடுவார் என கூட்டமைப்புத் தெளிவாகக் கூறிவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் கூறி அழைத்தாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிதான் கூட்டமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கிடமில்லை.
எனவே தமிரசுக் கட்சியின் சார்பில் கூட்ட மைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மிகத் தெளிவாக - வெளிப்படையாக அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராஜா என்பதை அறிவித்துள்ளார்.
இதேபோல் மாவை சேனாதிராஜாவும் தானே அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக வட மாகா ணத்தில் போட்டியிடுவேன் எனக் கூறியுள்ளார்.
இது தவிர, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் என்பதைக் கோடி காட்டியுள்ளார்.
இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் மட்டுமே இன்னமும் எதுவும் கூறாமல் மெளனம் காத்து வருகிறார்.
அவரின் மெளனம் மாவை சேனாதிராஜா வின் விடயத்தில் பெரிதாக எதுவும் செய்யப் போவதில்லை.
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரி வின்போதே சம்பந்தரை தமிழரசுக் கட்சி தூக்கி எறிந்துவிட்டது.
எனவே அவர் தப்பித்தவறி வாய் திறந்தால், அவரை மிக மோசமாக அவமானப்படுத்தவும் தமிழரசுக் கட்சி தயங்காது.
எனவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அவர்கள் இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்.
ஆக, வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழரசுக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறீதரன் ஆகியோரே செல்வாக்குச் செலுத்துவர் என்பது உறுதி.
நிலைமை இதுவாக இருக்கையில், வடக் கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு என்ன? என்பது தான் இப்போதிருக்கின்ற கேள்வி.
2018 டிசம்பர் மாதத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதான தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தனது முடிவு பற்றி தமிழ் மக் களுக்குத் தெரியப்படுத்துவது கட்டாயமானதாகும்.
முதலமைச்சர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து களம் இறங்குவாரா? அல்லது தன்னை அழைத்து வந்த இரா.சம்பந்தருக்கு எதிராகத் தனது செயற்பாடு அமையக்கூடாது என்ற விடயத்தில் மிகவும் உறுதியாக இருப்பாரா? என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும்.
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளரை கூட்டமைப்பு நிறுத்தலாம். தமிழரசுக் கட்சி நியமிக்கலாம். ஆனால் முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்பது தமிழ் மக்கள் என்பதால் மாண்பு மிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தனது முடிவை தமிழ் மக்களிடம் தெளிவாக - விரைவாகக் கூறிவிட வேண்டும்.
அவரின் முடிவு என்ன என்பதைப் பொறுத்து தமிழ் மக்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து, தங்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வர்.