தமிழ் மொழியில் உள்ள பழமொழிகளின் தத்துவங்களைச் சரியாகப் புரிந்து கொண்டால் அதுவே முகாமைத்துவ சிந்தனையாக மாற்றம் பெறும்.
அந்தவகையில் தமிழ் மொழியில் இருக்கின்ற ஒரு பழமொழிதான் ஆறின கஞ்சி பழங் கஞ்சி என்பதாகும்.
இதற்கு இரண்டு பொருள் உண்டு. அதில் ஒன்று கஞ்சி சூடாக இருக்கும்போது அதனைக் குடிக்க வேண்டும். கஞ்சி ஆறிவிட்டால் அது பழங்கஞ்சியாகிவிடும் என்பது.
மற்றையது எதையும் உடனுக்குடன் செய்ய வேண்டும். நாளை செய்யலாம்; பின்னர் பார்க் கலாம் என்றால் அது நடக்காது போகும் என்பது.
ஆக, ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற பழ மொழி எங்கள் இனப்பிரச்சினை விடயத்திலும் மிகப்பொருத்தமாகிவிடுகிறது.
ஆம், 2009ஆம் ஆண்டு வன்னி யுத்தம் முடிந்த கையோடு இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருந்தால் இனப்பிரச்சினை என்ற விடயம் முடிவுக்கு வந்திருக்கும்.
2009இல் போர் முடிந்த கையோடு உலக நாடுகள் இலங்கை மீது அதீத கவனம் கொண்டிருந்தன.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் உலக நாடுகள் எடுத்திருந்தன.
அதேசமயம் வன்னியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில் இலங்கை அரசும் சர்வதேசத்துக்கு அஞ்சி இருந்தது.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியமாகியிருக்கும்.
ஆனால் எங்கள் அரசியல் தலைமை இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் குறித்து வாய் திறக்கவே இல்லை.
மகிந்த ராஜபக் தரப்புக்கு பயந்து நடுங்கி எதையும் கதைக்காமல் விடுவதே ஒரேவழி என்ற முடிவில் அமைதியாக இருந்தனர். இதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பரிந்துரை செய்தது.
கூடவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனதாக்கிக் கொண்டார்.
அரசு முன்வைக்கும் வரவு செலவுத் திட்டங்களையயல்லாம் ஆதரித்து வாக்களித்து இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய பதிவை எதிர்க்கட்சி செய்தது.
இவ்வாறாக காலம் கடக்க, அரசியலமைப்புச் சீர்திருத்த முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. பெளத்தத்துக்கு முன்னு ரிமை என்பதுதான் சீர்திருத்தத்துக்கு திருச்சிற்றம்பலமாயிற்று.
அரசியலமைப்புச் சீர்திருத்தம் வந்தால் எங்கள் பிரச்சினை தீரும். சமஷ்டி என்பது எழுதப்படாமல் உள்ளேயே இருக்கிறது என்றெல்லாம் நம்மவர்கள் கூறி நம்மை ஏமாற்றினர்.
அரசியல் தீர்வு என்பதை மேலும் இழுத்தடிப்புச் செய்வதற்காக பிரதமர் ரணில் மீது நம்பிக் கையில்லாப் பிரேரணை என்ற நாடகத்தை கூட்டு எதிரணி தயாரித்து அரங்கேற்றியது.
அந்த நாடகம் சில காலத்தை பாழாக்க, இப் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் பேசாமடந்தைபோல ஆயிற்று.
என் செய்வது! காய்ச்சின கஞ்சி ஆறிவிட்டது இனி அவ்வளவுதான்.