டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தாவே மோதலுக்கு காரணம்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பரஸ்பர தாக்குதல்களையடுத்து இடை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தை குழப்பும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு செயற்படுவதாகவும் இதனால் இக் கூட்டத்தை முழுமைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் ஈபிடிபி தகவல்களை முன்கூட்டியே கசியவிட்டிருந்தது.
எனினும் இன்றைய தினம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையே குழப்பும் வகையில் திட்டமிட்டு ஈபிடிபி தனது சாதாரண உறுப்பினர்களையும் இன்று கூட்ட மண்டபத்தினுள் கொண்டு வந்திருந்தது.
முன்னதாக டக்ளஸ் தனது தலைமை உரையினில் கூட்டமைப்பினை விமர்சிக்க பதிலுக்கு கூட்டமைப்பினர் அதனை நிராகரிக்க கூச்சல் குழப்பத்தால் மண்டபம் அதிர்ந்தது.இணை தலைமை தாங்கிக்கொண்டிருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுமூக நிலையினை தோற்றுவிக்க பாடுபட்ட போதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை.
விவாதம் உச்சமடைந்த நிலையினில் பரஸ்பரம் நாயே பேயே துரோகி என சொற்கள் பறந்தன.தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன.இதில் வடமாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் காயமடைந்தார்.அவரது வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.யார் தாக்குகிறார்கள் என்பது தெரியாது போத்தல்கள் வீசப்பட்டது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக குழுக் கூட்டத்தில் தாக்குதல்களை திட்டமிட்டு அமைச்சர் டக்ளஸினது தம்பியார் தயானந்தாவே நடத்தியிருந்ததாக தெரியவருகிறது.
முதலில் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மீது பலரும் இணைந்து தாக்குதல் நடத்தியிருந்தனர். அண்மையினிலேயே இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியிருந்த அவரை ஈபிடிபியின் பிரதேசச பை உறுப்பினர்கள் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தினர்.
அத்துடன் அவர் கையிலிருந்த ஒலிவாங்கியினையும் அவர்கள் பறித்தெடுத்தனர். தொடர்ந்தும் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், உறுப்பினர்களான சர்வேஸ்வரன், விந்தன் என பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
கல்வி அமைச்சர் குருகுலராஜா தள்ளி வீழ்த்தப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீதும் தாக்குதல் முயற்சி நடந்திருந்தது.
இதேவேளை இது குறித்து EPDP - அவர்கள் சார்ந்தவர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - அவரது சகோதரன் தயானந்தா - தமது பக்க கருத்துக்களை தருமிடத்து முழுமையாக பிரசுரிக்கப்படும்.