இலங்கையில் இரு பிரதம நீதியரசர்கள்- ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை- தடைகளை அரசாங்கம் நீக்கியது

(3ம் இணைப்பு)
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இன்று மாலை மீண்டும் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், பதவியில் இருந்து விலகாத நிலையில் ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதன் மூலம் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் இரு பிரதம நீதியரசர்கள் அந்த பதவியில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானம் குறைபாடுகளை கொண்டது என்பதால், தற்போதைய பிரதம நீதியரசரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க முடியும் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறைபாடுகளை கொண்டதும் சட்டவிரோதமானதும் என ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
இதனிடையே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்சை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து சட்டத்தரணிகள் ஒன்றியம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மொஹான் பீரிஸ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் உத்தரவுகள் மூலம் பிரதம நீதியரசர் ஒருவரை பதவியில் இருந்து நீக்குவது ஜனநாயகத்திற்கு புறம்பானது என சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், மொஹான் பீரிஸ் கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுபடி தன்மை குறித்தும் கேள்விகள் எழும்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை
பிரதம நீதியரசராக கடமையாற்றிய ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளார்.

பிரதம நீதியரசராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் நோக்கில் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசராக கடமையாற்றி வரும் மொஹான் பீரிஸ் பதவியை துறக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமானது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் அடிப்படையில் பிரதம நீதியரசராக இன்று ஷிராணி பண்டாரநாயக்க மீளவும் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வார் என சட்டத்தரணிகள் சங்க அழைப்பாளர் ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.
சிரானி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவி வகிக்க காணப்பட்ட தடைகளை அரசாங்கம் நீக்கியது
இலங்கையின் 43ம் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக பதவி வகிக்க காணப்பட்ட சகல தடைகளும் நீக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இன்று இந்த தடைகளை முழுமையாக நீக்கியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும்ää சிரானி பண்டாரநாயக்க பெரும்பாலும் நாளை பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் சிறிபவன் நியமிக்கப்படலாம் என நீதி அமைச்சு உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila