மு.காங்கிரசை நம்ப வேண்டாம்! கூட்டமைப்பிற்கு பல தடவைகள் எச்சரித்துள்ளோம்: உலமா கட்சித்தலைவர்

கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியை பெற்றதன் மூலம் மஹிந்தவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டும் என நினைத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் முதுகில் அக்கட்சி குத்தியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யாமல் ஆட்சியை அப்படியே விட்டு வைத்திருப்பதன் காரணம் ஒருவேளை மஹிந்த வென்றால் கிழக்கு சபையை காட்டி மீண்டும் மஹிந்தவுடன் இணைவதற்காகவே என நாம் அன்று கூறியது இன்று நிஜமாகியுள்ளது.
மஹிந்த தோற்ற நிலையில் அவரின் கட்சிக்காரர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முஸ்லிம்; காங்கிரஸ் தொடர்கிறது.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உதவும் என மலைபோல் நம்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம் அக்கட்சியினரால் இன்னமும் மு.கா பற்றியும் அதன் பதவி வெறி பற்றியும் புரிந்து கொள்ளாமையுமேயாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் கூட்டமைப்புக்கும் பல துரோகங்களை செய்து வந்துள்ளது.
ஆனாலும் முஸ்லிம்கள் சம்பந்தமான விடயங்களில் தமிழ் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதையம் அக்கட்சியை தூக்கிப்பிடிப்பதையுமே கண்டு வந்துள்ளோம்.
இது பற்றி நாம் பல தடைவை தமிழ் கூட்டமைப்பை எச்சரித்துள்ளோம். ஒரு ஏமாற்றுக் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதற்காக மட்டும் அக்கட்சி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதையும் முஸ்லிம் சமூகத்தில் பலமாக அரசியல் செய்து வளர்ந்து கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளுடன் பேசி தமிழ் முஸ்லிம் நல்லுறவை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் என நாம் பல தடவை தமிழ் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மு. காவை நம்புவதும் பின்னர் ஏமாறுவதும். ஏமாற்றி விட்டார்களே என முஸ்லிம்களை போன்று ஒப்பாரி வைப்பதையுமே கண்டு வருகிறோம்.
கிழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளமை முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த ஆறுதல் வெற்றி என்றும் சொல்லலாம்.
மஹிந்தவை விரட்ட புறப்பட்ட முஸ்லிம்களுக்கு போங்கடா முட்டாள்களா? நாங்கள் மத்தியில் மைத்திரிக்கு ஆதரவு, மாகாணத்தில் மஹிந்தவுக்கு ஆதரவு என்பது போல் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் தலைமையிலான மக்கள் காங்கிரசின் செயற்பாடுகள் உள்ளன.
இத்தகைய பதவிக்காக சோரம் போகும் முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்களும் தமிழ் கூட்டமைப்பும் நம்புவது இன்னுமின்னும் சிறுபான்மை மக்கள் மத்தியில் விரிசலையே ஏற்படுத்தும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila