ராஜபக்ச கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிப் படமெடுத்தார்கள்- ராஜ்கிரண்

ராஜபக்ச கொடுத்த பணத்தில்தான் ஈழத் தமிழர் பற்றிய படத்தையே இங்கு எடுத்தார்கள் என்று அதிரடியாகப் பேசியுள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
இலங்கைத் தமிழர், குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் சிவப்பு.
சத்யசிவா இயக்கியுள்ள இந்தப் படம் சற்று தாமதத்துக்குப் பிறகு வெளியாகிறது.
படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் கூறுகையில்,
ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை.
சமீபத்தில் வெளியான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்ப் படங்களும் கூட சிங்களச் சார்புடன், ராஜபக்ச கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்டவைதான்.
அவை ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்கள் அல்ல.
இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் உணரவில்லை.
பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது.
அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது.
எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு' சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு," என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila