இலங்கை அரசியலில் மட்டுமே இவ்வாறு நடக்கும்!

இலங்கை நாடு பௌத்தத்தை முதன்மைப்படுத்துகின்ற நாடு என்பதை நாம் இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அந்த பௌத்தம் இலங்கையில் என்னென்னவெல்லாம் செய்கின்றது என்று நினைத்தால் வெட்கித்தலை குனிய வைக்கும் அளவிற்கு அமைகின்றது என்பது மட்டும் உண்மை.
இவ்விடத்தில் பௌத்தம் பற்றிப் பேசுகின்றோம் என்பதனால் மதவாதத்தை தூண்டிவிடுகின்றோம் என்று யாரேனும் நினைத்துவிடாதீர்கள். மதவாதத்தை தூண்டுவதல்ல நமது நோக்கம். எனினும் யதார்த்தைத்தை வாசகர்களுக்கு எடுத்து வழங்குவது நமது கடமை.
ஒரு நாட்டில் வசிக்கும் சக இனத்தவர்களை மதத்தின் பெயரால் கொல்வதற்கும் துன்புறுத்துவதற்கும் இலங்கையில் பௌத்தமும், புத்த பெருமானும் கையில் எடுக்கப்படுகின்றார்கள்.
தான் வாழும் நாட்டில் தன்னைப்போன்று மற்றவர்களையும் நோக்கத்தெரியாமல் நமக்கு கிடைக்கும் அதிகாரங்கள் அவர்களுக்கு கிடைக்க கூடாது என்பதில் ஆட்சியாளர்களும் பௌத்தத்தை பின்பற்றுபவர்களும் இறுமாப்போடும் விடாப்பிடியோடும் நிற்கும் போது என்னே மனிதர்கள் இவர்கள் என்று முகம் சுழிக்க வைக்கின்றது.
பௌத்தத்தில் இருந்தால் தான் ஆட்சியை கைப்பற்ற முடியும் என ஒரு நியதி உண்டு என்பதால் மன்னர்காலத்தில் இருந்து இன்றுவரை தங்களை பௌத்தர்களாகவும் பௌத்தத்தை காப்பவர்களாகவும் காட்டிவரும் இலங்கையின் பெரும்பான்மை தரப்பு ஏனோ பௌத்தத்தையும் அதன் கொள்கைகளையும் பின்பற்ற மறுக்கின்றது.
நாங்கள் சிங்களத்தில் கதைக்கின்றோம் அவர்கள் தமிழில் கதைக்கிறார்கள். அதைத்தவிர அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று இலங்கையின் பெரும்பான்மை தரப்பு நினைத்திருக்குமாயின் இற்றை வரைக்கும் இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்காது.
இது ஒருபுறமிருக்க, தன் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிப்பதற்காக படைவீரர்களுக்கு ஆசிவழங்கி, மந்திரித்து நூல் கட்டி வைக்கும் ஒரே நாடு இலங்கை என்று சொன்னால் அதற்கு மாற்றுக்கருத்து கிடையாது.
வன்னியில் நடந்த யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றி பெற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் பிரித்தோதி நூல்கள் கட்டி வழியனுப்பி வைத்ததை யாரும் மறந்து விடமுடியாது.
அதேபோன்று யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னர் ஜனாதிபதி உட்பட இராணுவத்தளபதி என அனைவரும் பௌத்த பிக்குகளால் ஆசீர்வதிக்கப்பட்டு விசேட வழிபாடுகள் பௌத்த விகாரைகளில் நிகழ்த்தப்பட்டதையும் நாம் மறப்பதற்கில்லை.
இவ்வாறு தன் நாட்டில் இருக்கும் ஒரு இனத்தின் குரல்வளையை நசுக்கி அவர்களை கருவறுக்க பௌத்தம் பயன்படுகின்றது என்றால் இன்றைய தினம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச நாடு திரும்பும் வேளையில் பௌத்த பிக்குகள் ஒன்றாக கூடி நின்று அவரை ஆசீர்வதித்து வரவேற்ற நிகழ்வானது இலங்கையில் என்ன செய்தாலும் பௌத்தம் காக்கும் என்ற நிலையாகிவிட்டது.
மக்களின் வரிப்பணத்தினை கொள்ளையடித்து தங்கள் வயிற்றை நிரப்பியவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு ஆசிவழங்கவும் பௌத்தம் உண்டு என்றால் இலங்கையில் எதைச்செய்தாலும் பௌத்தனாக இருந்தால் போதும் என்று இனிவரும் சந்ததிகள் நினைத்துக்கொள்ளும்.
பாவம்! சித்தார்த்தன் என்கின்ற அந்த துறவியால் மொழிந்த பொன்மொழிகளாலும் சிந்தனையாலும் உருவாகிய பௌத்தம் இன்று இவ்வளவு அட்டூழியங்களுக்கு துணைபோகின்றது எனும் போது புத்தர் கூட இதனை மன்னிக்கமாட்டார்.
அட! சீனாவிடமிருந்து விடுதலை வேண்டி திபெத்தில் பௌத்த துறவிகள் தீக்குளிக்கின்றார்கள். இங்கோ தன் நாட்டில் உள்ள பிற இனத்தவர்களை அடக்கச்சொல்லி ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் பௌத்த துறவிகள்.
திபெத்தின் ஆன்மீகத்தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வர விசா மறுத்ததன் மூலம் இங்கு பௌத்தம் என்ன நிலையில் இருக்கின்றது என்பதை புத்தரே அறிந்திருப்பார்.
ஆக அடுத்து வரும் சந்ததிகளுக்கு இவர்கள் எதைப்பாடமாக விட்டுச்சொல்லப்போகின்றார்கள் என்பதை புத்தபெருமானும் அறியமாட்டார்.அதுவரைக்கும்,
புத்தம் சரணம் கச்சாமி..!
சங்கம் சரணம் கச்சாமி..!
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila