நீதிபதிகளின் ஆட்சியில் வடக்கு தலைநிமிரட்டும்


வட மாகாணத்தில் இப்போது நீதிபதிகளின் ஆட்சி ஆரம்பமாகியுள்ளது.இலங்கையில் எந்த மாகாணத்திலும் எப்போதும் இல்லாத பெருமையை வடக்கு மாகாணம் கொண்டிருப்பது கண்டு புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது.

ஆம், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் இந்த நாட்டின் நீதியரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன். எதையும் வெளிப்படையாகக் கருத்துரைக்கக்கூடிய நீதியரசரின் கீழ் வடக்கு மாகாண ஆட்சி வந்ததால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களை ஒழுங்குபடுத்தவும்- தமக்கிருக்கக்கூடிய கடமைகளை உணரவும் தலைப்பட்டுள்ளனர்.

இதன்மூலம்  வடக்கு மாகாணத்தில் நல்லதொரு அரசியல் அமைப்பு உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போனவர்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றுகின்ற ஒவ்வொரு உரையினதும் பொருளை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

எனவே காலாகாலமாக அரசியல்வாதிகளின் கபடத்தனமான உரைகளை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலையில் நேர்மையான அரசியல் தலைமையே முதலில் எங்களுக்குத் தேவை என்று தமிழ் மக்கள் உணர்கின்றனர். அந்த  வகையில்தான் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ் மக்கள் தங்கள் மாகாணத்தின் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்தனர்.

ஒரு நீதியரசர் வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருப்பது நல்லதென்ற தமிழ் மக்களின் முடிவு, பாதை மாறிப் பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகளையும் இழுத்து நல்வழிப்படுத்துவதாக அமைகிறது.

அதேநேரம் நீதியரசரை தமிழ் அரசின் தலைவராக்கி விட, நீதியரசர்-நீதிபதிகள் மூலமாக தமிழ் மண்ணை - தமிழர் தாயகத்தை நிமிர்த்து வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆம், யாழ்.மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் அவர்கள் பதவி ஏற்றதும் அவரின் துணிச்சல்மிகு நடவடிக்கையால் வடக்கு மாகாணம் முழுமையும் நீதிபதிகளின் ஆட்சியாக மாறியுள்ளது.

பலவீனமான தமிழ் அரசியல் தலைமைகளால் எதுவும் செய்ய முடியாது என்றிருந்தவேளை, நீதியரசர் முதலமைச்சராகவும், துணிச்சல் மிக்கவர்கள் வடக்கின் நீதிபதிகளாகவும் அமர்ந்த போது அனைத்து நீதிபதிகளும் வடக்கில் நீதியை நிலைநாட்ட துணிந்தனர்.இதனால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் வாய்ப்பு கிட்டி வருகிறது.

இன்னும் சில மாதங்களில் வடக்கு மாகாணம் திருந்தியது-திருத்தப்பட்டது அதிசயம் என்று மற்றவர்கள் போற்றக்கூடிய அறிகுறிகள் இப்போதே தென்படுகிறது.

அரசியலைவிட; அதிகாரத்தை விட நீதித்துறை ஆட்சி செய்வது நல்லாட்சியை விட உயர்வானது என்று கூறுவதில் தமிழர்கள் பெருமை அடைய முடியும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila