வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர் என மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எவ்வாறு வெள்ளவத்தையில் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி இரவு வித்தியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவர் 19 ஆம் வெள்ளவத்தைப் பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதனால் மக்களிடத்தில் பாரிய குழப்பம் ஏற்பட்டதுடன் நீதிமன்றத்திற்கு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் அறிக்கையும் பொறுப்பற்றதாகவே காணப்பட்டமையினால் குறித்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றிற்கு வழங்குமாறு சட்டத்தரணி தவராசா கோரியிருந்தார்.
கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் முழு அறிக்கை ஒன்றினை வழங்குமாறு குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
எனினும் குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றதற்கு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரே காரணம் என குறிப்பிடப்படுகின்ற நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.
அதற்கமைய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் விசாரணையின்போது குறித்த விடயம் தொடர்பிலான முழுஅறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நம்பப்படுகின்றது.