இஸ்லாமின அரசு ஒன்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் (டிண்டிண்) என்ற அமைப்பினால் தற்போது இலங்கையிலும் ஒருவகை அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்தமை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பலியானதாகக் கூறப்படும் இலங்கையர் தொடர்பான தகவல்கள் தற்போது முதன்முறையாக வெளிவந்துள்ளன.
கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக தெரியவந்துள்ளது.
இவர் அமெரிக்க படைகள் மேற்கொண்ட விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கொழும்பில் திருமணம் முடித்துள்ளதோடு 6 குழந்தைகள் இருப்பதாகவும் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவரென கூறப்படுகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டத்தைப் பெற்ற அவர், அராபி, உருது, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கலேவெல நகரில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் சுமார் இரண்டு வருடங்கள் அதிபராக கடமையாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் மக்கா நகர் செல்வதாகக் கூறி அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்றுள்ளார்.
அவர் அதிபராக பணியாற்றிய குறித்த சர்வதேச பாடசாலையில் இருந்து எந்தவித தடயங்கள் ஆவணங்களையும் பெறமுடியவில்லை. அனைத்தையும் அவர் அகற்றிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக அவரது கையெழுத்து உள்ள ஒரு ஆவணம் கூற அப்பாடசாலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.