ஐ.நா. பதிவு செய்த அறிக்கை... ஆறுதலா? அநீதியா? மஹிந்தவின் போர் வெறியாட்டம் அம்பலம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட சர்வதேச விசாரணை தொடர்பான அறிக்கை, ஈழத்தில் மகிந்த நடத்திய போர் வெறியாட்டத்தை பதிவு செய்துள்ளது.
ஈழத்தில் நடந்த மிகப் பெரும் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் தொடர்புபட்டவர்களின் சாட்சியங்களுடன் கடந்த பல வருடங்களாக ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் கொண்ட இந்த அறிக்கையை ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒருபடிக்கல்லாக கொள்ள முடியும்.
மிகவும் கொடுமையான பாலியல் வன்முறைகள், நீதிக்குப் புறம்பான மனிதப் படுகொலைகள், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை, சரணடைந்தவர்கள் அழிக்கப்பட்டனர். வெள்ளைவான்களில் கடத்தி ஒழிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் என பல்வேறு விடயங்களை மிகவும் தெளிவாக உள்ளடக்கியிருக்கிறது.
இசைப் பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது இராணுவத்தினரால்தான் என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சரணடைந்தவர்களை சிங்கள இராணுவம் சுட்டுப்படுகொலை செய்த விடயங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பின் அறிக்கையில் இந்த தீவில் நடந்த மாபெரும் அநீதி ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கூறியுள்ளதைப்போல தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகின்ற விடயமே இது.
ஐ.நா. அறிக்கை குறிப்பாக இரண்டு தரப்புகளுக்கு இடையிலான உள்நாட்டுப் போராகவும் அதன்போது இழைக்கப்பட்ட குற்றமாகவும் வரையறுப்பது மிகவும் அநீதியானது. ஈழத் தமிழ் இனத்திற்கு எதிராக நடைபெற்ற இந்தப் போரில் தமிழ் மக்கள் எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.அறிக்கை நடந்த இனை அழிப்புப் போரை வெறும் போர்க்குற்றங்களாக வரையறுப்பது தவறானது.
ஐ.நாடுகள் மனித உரிமை ஆணையக அறிக்கை இலங்கையின் அரசியல் அமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் எத்தகையதாக இருக்கிறது என்பதும் அதனால் தமிழ் மக்களுக்கு நீதியினை வழங்க முடியாது என்றும் குறிப்பாக படைத்துறை, நீதித்துறை என்பன தமிழ் மக்களுக்கு எதிராக இயங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
2009ம் ஆண்டில் மாத்திரமின்றி கடந்த பல வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வந்துள்ளதையும் ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. அறிக்கை எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் என்ற அடிப்படையை குறித்து குறிப்பிட மறுத்திருப்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அதேநேரம் அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மாபெரும் அநீதியுமாகும். இலங்கையில் நடந்தது போர்க்குற்றங்கள் என்று ஐ.நா. வரையறுக்கின்றது.
ஆனால் அந்தப் போர்க்குற்றங்கள் எதற்காக நிகழ்த்தப்பட்டன என்பது குறித்து ஐ.நா. மெளனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது.. ஐ.ந.வின் அறிக்கையை இலங்கையின் அரசியல் கட்டமைப்பும் நடந்த படுகொலைகளும் அவை நடத்தப்பட்ட விதங்களும் ஓர் இனப்படுகொலைக்கான அடிப்படையை கொண்டவை என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை வடமாகாண சபை நிறைவேற்றியது. 2009 இல் முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி காலம்காலமாக திட்டமிட்ட இன அழிப்பு நடந்து வருகிறது என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தே இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வொன்றைக் காண இயலும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று இப்போது கருதவில்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூறியிருக்கிறார்.
இலங்கை 2009ம் ஆண்டுடன் தனது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சியில் அதன் தலைமைத்துவம் அதற்கான நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தாலும் தொடர்ந்தும் அந்தக் கட்டமைப்பு பேணப்படுகிறது.
அரசியல் மற்றும் இராணுவக் கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் உள்ளன.
நீதி நிலைநாட்டப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனாலும் உள்ளக விசாரணையே நடத்தப்படும் என்றும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளை விசாரிக்கும் நீதிக் கட்டமைப்பு இலங்கையில் இல்லை என்றும் அது சிதைந்துபோயிருப்பதையும் ஐ.நா. அறிக்கை நன்கு புரிந்துகொண்டுள்ளது.
கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் நடந்த ஐ.நா. விசாரணையை உள்நாட்டில் நடத்த முடியாத நிலமை ஏற்பட்டது. இதன் காரணமாக இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் சாட்சியளிக்க முடியாது போனமையும் இதற்கு காரணமாக அமையலாம்.
இலங்கையில் ஏன் இனப்படுகொலைகள் நடந்தன என்பதையும் அதை இன்னொருமுறை நடக்காமல் செய்ய தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் போராட வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் ஐ.நா.வின் சர்வதேச விசாரணையில் உரிய வகையில் சாட்சியளித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை எமது சாட்சியங்கள் ஊடாக எடுத்துரைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதன் மூலமே இலங்கையில் ஈழத் தமிழர் சந்திக்கும் இன ஒடுக்குமுறைக்குத் தீர்வையும் நடந்த இனப்படுகொலைக்கு நீதியையும் பெற முடியும்.
- தீபச்செல்வன் -
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila