
எந்த தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஷ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ‘மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கக்கூடாதென, நல்லாட்சி அரசாங்கத்திலும்கூட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராடிய ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் கார்த்திகை வீரர் தினம் என எந்த தடையுமின்றி கொண்டாடி வருகின்றார்கள். ஆனால், வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் போராட்டத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக காண்பிக்கின்றனர். உலகத்திலுள்ள அனைத்து மக்களும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையினை எந்த சட்டத்தினாலும் தடுக்க முடியாது. உலகெங்கும் இருக்கக்கூடிய புலம்பெயர் உறவுகள் மற்றும் தொப்புள்கொடி உறவுகளும் நினைவுகூறும் அந்த நேரத்தில், தமிழர் தாயகத்திலுள்ள மக்களும் நினைவுகூற அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே எந்த மதத்தவர்களாக இருந்தாலும், கோயில்களிலோ, தேவாலயங்களிலோ தீபமேற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். வீடுகளில் தீபமேற்ற அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் நல்லூர் கோவில் மற்றும் மரியன்னை பேராலயத்திலும் அஞ்சலி செலுத்த முடியும். ஒரு விடயத்தினை மூடி மறைத்துவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. தமது உயிர்களை மாய்த்த மாவீரர்களுக்கும், போரில் கொல்லப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியே ஆகுவோம்’ என தெரிவித்தார்.