நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோது மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்படவில்லை எனவும் சாடினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் செப்ரெம்பர் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 150 வரையான இளைஞர்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 70 பேர் வரையிலானோர் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.
இந்த விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மண்டைத்தீவு, செம்மன்தோட்ட காணிக்கிணறுகளிலும், மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டன. இந்த இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இச்செயல் இங்கு சடலங்கள் புதைக்கப்பட்டமையை உறுதி செய்கின்றது.
இவற்றை அகழ்வுக்குட்படுத்தி இது தொடர்பில் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்களை விசாரணைக்குட்படுத்துமாறும் அவர் கோரினார்.