இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் யாழ்ப்பாணம சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிடிக்கப்பட்ட இருவரும் இளைஞர்களினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது :-
அராலி செட்டியார்மடம் வடக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சித்தங்கேணி பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்று மீண்டும் வீடு செல்வதற்காக சித்தங்கேணி சந்தியில் நின்ற பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
போயா விடுமுறை தினமான இன்று அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இந்த நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இரண்டு இளைஞர்களும் யுவதி இருந்த பஸ்ஸில் ஏறியுள்ளனர். இதனையடுத்து குறித்த யுவதியை அவர்கள் இருவரும் வலுக்கட்டாயமாக பஸ்ஸில் இருந்து இறக்கி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர்.
யுவதி அவ்விரு இளைஞர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில், ஒருவர் யுவதியை பலமாக தலையில் தாக்கியுள்ளார். நினைவிழந்த நிலையில் இருந்த யுவதியின் தலையில் தலைகவசத்தை அணிவித்து, நவாலி பகுதியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நினைவு திரும்பிய யுவதி தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட, அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். யுவதியைக் கடத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் பெற்றோல் இன்றி நவாலி வளுக்கையாறு பகுதியில் இடைநடுவே நின்றுவிட பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் இரு இளைஞர்களையும் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து இளைஞர்களினால் குறித்த யுவதி மீட்கப்பட்டதுடன் இரு இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
கடத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் நவாலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அதில் பிராதான நபராக செயற்பட்டவர் தனியார் பேக்கரி ஒன்றின் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் வாகனத்தின் சாரதியெனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்களை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.