
மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு பெட்டியில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரி-56 துப்பாக்கி ஒன்றும் ஐந்து கைத்துப்பாக்கிகள் என்பன இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. சாரம் மற்றும் மேலாடை அணிந்த ஒருவரினாலேயே திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர், லக்கல பொலிஸ் நிலையத்தில் உப சேவை அறையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டிக்கு அருகிலிருந்த திறப்பின் மூலம் பாதுகாப்பு பெட்டியைத் திறந்து குறித்த ஆயுதங்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் மதுபோதையில் இருந்தனரா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.என் விக்கிரமசிங்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் விசேட பொலிஸ் குழுவொன்று லக்கல பொலிஸ் நிலையத்தை நோக்கி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.