வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன்
என் நண்பர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்திலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இன்னாள் அரச அதிகாரி. அவரது கருத்துகள் தேவையற்ற பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் அவை நியாயமான கருத்துகளாக இருந்தாலும் ஆளுனர் பதவிக்கு அவை பொருந்துவதில்லை.
ஆளுனர் மத்திய அரசுக்கும், மாகாணசபைக்கும் இடையிலான பாலமாக செயற்பட வேண்டும். அதற்கு அவர் அமைதியாக செயற்பட வேண்டும். அவரும் அவரது பழைய அரசியல்வாதி நினைப்பில் ஏட்டிக்கு போட்டியாக கருத்துகளை கூற இப்போது தொடங்கி விட்டார். இப்படி கருத்து கூறுவதில் அவர் ஒருவித இன்பமடைவதாக தெரிகிறது.
ரெஜினோல்ட் பிழையான ஒரு மனிதர் அல்ல. விஷயம் தெரியாதவரும் அல்ல. ஆனால் அவருக்கு இது புரியாமல் போனது ஆச்சரியமே. அவர் வடமாகாணத்தில் நியமிக்கப்பட்டதும், தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அவர் கருத்து கூறக்கூடாது, என்பது அல்ல. ஆனால் அடிக்கடி சர்ச்சைக்குரிய விவகாரங்களை அவர் இப்போது தொடர்ந்து கதைத்து வருகிறார். எனவே இந்த அரசியல் மேடை பேச்சுகளை நிறுத்திவிட்டு, ஒருகாலத்தில் வடக்கில் ஆளுநராக இருந்த லயனல் பெர்ணான்டோவின் பாணியை அவர் பின்பற்ற வேண்டும்.
அது என்னவோ நாட்டின் ஏனைய மாகாண ஆளுநர்கள், இருக்கின்றார்களா, இல்லையா என்றே தெரிவதில்லை. ஆனால் வடமாகாணத்துக்கு வந்து விட்டால் எல்லோர் நிலைமைகளும் மாறிவிடுகின்றன. என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.