
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தினால், அந்தப் பிரதேசமெங்கும் பாதிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலையிலும் இரண்டு பாரிய குண்டுகள் வெடித்த சத்தங்கள் கேட்டன.
ஆயுதக்கிடங்கில் இருந்து வெடித்துக் கிளம்பிய, ஆட்டிலறி, மற்றும் பல்குழல் பீரங்கிக் குண்டுகள் சுற்றுப் புறத்தில் உள்ள பகுதிகள் எங்கும் விழுந்து வெடித்து, வீடுகள், வாகனங்களுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆயுதக்கிடங்கில் பற்றிய தீ அணைக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்த போதிலும், இன்று காலை இரண்டு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இதன் அதிர்வுகளை நெடும் தூரத்துக்கு உணர முடிந்ததாக தகவல்கள் தெரி்விக்கின்றன. சலாவ இராணுவ முகாமைச் சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவுடைய பிரதேசம் இன்னமும் ஆட்கள் நுழைவதற்குத் சிறிலங்கா இராணுவத்தினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில், ஏராளமான குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளதாவும், வெடிக்காமல் இருப்பதாலும், சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீதிகள், தோட்டங்களில் குண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. வீட்டுச்சுவர்களுக்குள் புகுந்தபடியும் ஆட்டிலறிக் குண்டுகள் காணப்படுகின்றன.