தடுப்பில் இருந்த போது எமக்கு இராசாயன உணவு தந்தனர், ஊசி போட்டனர். ஊசி போட்டவுடனேயே போராளி ஒருவர் உயிரிழந்தார் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று(சனிக்கிழமை) ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. இந்தநிலையில் குறித்த அமர்வில் கலந்து கொண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் சென்றதற்கான ஆதாரம் நிறைய இணையங்களில் வெளிவந்துள்ளன. அதற்கான பல சாட்சியங்களும் இருக்கின்றன. அவர்கள் பயத்தில் கதைக்கின்றார்கள் இல்லை. கதைக்க போனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எங்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்று தர போவதில்லை. தமிழ் அரசியல் கட்சிகள் கூட தற்போது ‘பல்டி’ அடிக்கின்றார்கள். எனவே கண்டிப்பா சர்வதேசத்தில் இருந்து நடுநிலையான நாடுகள் தான் எங்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
யுத்த தர்மம் என்ற ஒன்று இருக்கின்றது. இலங்கை அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தருமம் என்றால் என்ன என்பதனை போதிக்க வேண்டும். சரணடைந்தவங்களை சுடுவது நியாயம் அல்ல. ஏனெனில் அவங்க நிராயுத பாணியாக தான் சரணடைந்தவங்கள். நான் ஒரு முன்னாள் போராளி தடுப்பில் இருந்து வந்த பின்னர் யுத்த நினைப்பை விட்டு ஒதுங்கி இருக்கின்றேன்.
நாங்கள் தடுப்பில் இருக்கும் போது எமக்கு இராசாயன உணவை தந்து இருக்கின்றார்கள். நான் தடுப்புக்கு போக முன்னர் நூறு கிலோ எடைய தூக்கிக் கொண்டு கிலோ மீற்றர் கணக்குக்கு ஓடுவேன். தடுப்பால வந்த பிறகு ஒரு பொருளை தூக்க முடியவில்லை. அத்துடன் கண் பார்வையும் குறைவடைந்துள்ளது. இதில் இருந்து எங்களுக்கு ஏதோ நடந்து இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது’ என தெரிவித்துள்ளார்.