மத்திய அரசுக்கு உரிமையுடன் காணிகளை வழங்கமுடியாது எனவும் அப்படி வழங்கினால், அக்காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியின் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டமானது இன்று இணைத் தலைவர்களான வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இருபத்தெட்டு விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட போதும் நீர்வழங்கல், மின்சாரம், வீதி, மீன்பிடி,விவசாயம், சுகாதாரம்,கல்வி,போக்குவரத்து, ஆகிய எட்டு விடயங்கள் மாத்திரமே ஆராயப்பட்டது. ஆராயப்பட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் அதன் குறை நிறைகள் என்பன ஆராயப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,
மத்திய அரசு மாகாண அரசுக்கோ. மாவட்டச் செயலகங்களுக்கோ தெரியாது பல பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது எனத் தெரிவித்த அவர் மத்திய அரசுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக மாகாணத்திற்குள் காணிகளை உரிமத்துடன் வழங்க முடியாது என்றும் அவ்வாறு வழங்குதல் எதிர்காலத்தில் வேறு பல பிரச்சினைகளை கொண்டு வரக்கூடும். அதாவது அவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தற்போதைய அபிவிருத்திகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறிவிட்டு அவர்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். இது விரும்பத்தக்கது அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் மாங்குளத்தில் கூட பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு காணியை நீண்ட கால குத்தகைக்கு தரலாம் என்றே நாங்கள் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.