புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மையினராக தமிழர்கள் வாழும் பிரதேசமான முன்னேஸ்வரம் பகுதியில் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்கள், 9ஆம் தரம் வரை மட்டுமே தமிழ் மொழிமூலம் கற்கக்கூடிய பாடசாலைகள் காணப்படுகின்றன.
இறைமையுள்ள எமது நாட்டில் ஒருவர் தாம் விரும்பும் மொழியை கற்கவும் பேசவும் முடியும் என்பது எமது நாட்டின் கௌரவமிகு தனிமனித சுதந்திரமாகும், என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தளம் மாவட்டம் முன்னேஸ்வரம் பகுதியில் தமிழ் மொழி மூலப்பாடசாலை அமைத்துத் தருமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை அவர்களால் இன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ள விடயங்களானவை,
புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழியில் கற்க விரும்பும் பாடசாலை மாணவர்களுக்கு அது எட்டாக் கனியாகவே உள்ளது. இதற்கு காரணம் ஆரம்பக் கல்வியை தமிழ் மொழி மூலம் கற்றுவிட்டு இரண்டாம் நிலைக் கல்வியை சகோதர மொழியிலோ அல்லது சர்வதேச மொழியிலோ கற்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அம்மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இவை சாதாரண ஒரு விடையமல்ல இதனால் புத்தளம் மாடவட்டத்தில் தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் பிற மொழியில் ஆரம்பக் கல்வியை கற்காமையினால் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்கும்போது பாரிய மொழிப்பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.
இதனால் அவர்களது எதிர்கால வாழ்வை இடைநடுவே கலைத்து விடுகின்றனர். இலவசக் கல்வி என்பது புத்தளம் மாவட்ட முன்னேஸ்வரம் பிரதேச தமிழ் மொழிமூல இரண்டாம் நிலை கல்வி கற்க விதிவிலக்கானவையா.
கௌரவ மேன்மை மிகு ஜனாதிபதி அவர்களே!
புத்தளம் மாவட்டத்தின் தமிழ் மக்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் கல்வி சம்மந்தமாக இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் பல இன்னல்களை என்னிடத்திலும் மேலும் பல இடத்திலும் எடுத்து வைத்துள்ளார்கள் என்பதை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
புத்தளம் முன்னேஸ்வரம் பகுதியில் தமிழ் கற்பிக்கின்ற பாடசாலைகள் 9 ஆம் தரத்திற்கு மேல் இல்லை எனவும் அதனால் கல்வியை தமிழில் தொடர முடியாத சூழ்நிலை இருப்பதனால் இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழிமூலம் கல்வியைத் தொடர முடியாதுள்ளன.
அதன் காரணமாக இடைநடுவில் இடைவிலகல் ஏற்படுவதை பெற்றோராலும் வேறு யாராலும் தடுக்க முடியாதுள்ளன என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இந்த துன்பகரமான செயலால் சிறுவயதில் மதுபோதைக்கு அடிமையாவதும் இளவயது திருமணமும் நாட்டுக்கும் நாட்டு அரசாங்கத்திற்கும் அபகீர்த்தி உருவாகும் சூழ்நிலையை இந்த நல்லாட்சி அரசாங்கம் அம்மக்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்ல நடவடிக்கையை விரைவாக எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் தங்களுக்கு இக்கடிதத்தினை அனுப்புகின்றேன். எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.