மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றிய போதே, சிறிலங்கா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.“போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்படும் நீதிச் செயல்முறைகளில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அரசாங்கம் அழைக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்மொழிந்திருக்கிறது.
ஆனால், வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு அழைப்பதில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டில் நான் இருக்கிறேன்” என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.