வடமாகாண சபையினை புறந்தள்ளி மன்னார் மாவட்டத்தின் பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கி நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்களை மத்திய அரசு அமுல்படுத்த முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.வேலை வாய்ப்பென காரணங்காட்டி இம்முயற்சிக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.சுமார் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா பெருமதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்டத்தினில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.அவ்வாறு கோரப்பட்டதில் இந்த ஆண்டிற்கான ஒதுக்கீடான 700 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை முன்னெடுக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் அந்த வேலை வாய்ப்பிற்கு மாவட்ட இளைஞர்களையே நியமிக்கவும் இணக்கம் காணப்;படடுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றார்.அத்துடன் மாவட்டத்தில் தொழிலாளர்களைப் பெறமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் மாகாணத்திற்கு உட்பட்ட வகையில் பணியாளர்களை நியமிக்கவும் அனைத்து தரப்புமே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துவருகின்றார்.
இதனிடையே இத்திட்டத்தை அமுல்படுத்த வன ஜீவராசிகள் திணைக்களம் தான் ஆக்கிரமித்துள்ள 29 ஆயிரம் கெக்டேயர் பகுதியினில் திட்டத்திற்கான 2 ஆயிரத்து 900ம் ஏக்கரை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.
ஏற்கனவே பருத்தித்துறை துறைமுக புனரமைப்பு,குருநகர் இறங்குதுறையென அனைத்திலும் மீன்பிடி அமைச்சினை தன்வசம் வைத்துள்ள வடமாகாணசபை புறந்தள்ளப்படுகின்ற நிலையினில் தற்போது மன்னாரிலும் அதே நாடகம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவோடு தொடர்வது சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.