வடமாகாணத்தில் அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பினில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கைவிட்டுவிட்ட நிலையினில் மாவட்ட செயலகங்களில் இந்த வார இறுதியில் இது பற்றி ஆராய கூட்டங்களை கூட்டப்போவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் முப்படைகளாலும் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பினில் கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 அளவில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேவர்தன மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் ஒருவாரகால அவகாசமும் முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், யாழ்ப்பாணம் வலிகாமம் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும், கிளிநொச்சி மக்களின் நிலங்களை விடுவிப்பது எதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
முப்படைகள் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பினில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கோரிக்கைகளை நிராகரித்துள்ள படையினர் கூட்டமைப்பினரை பொருட்டாக கூட மதிக்கப்போவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகின்ற கூட்டங்கள் தாங்களும் முயல்வதாக கூட்டமைப்பு காட்டிக்கொள்ளப்போகும் நாடகமென விமர்சிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.