இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் அதிகம் அழுத்தம் கொடுத்தால் அது மோசமான ஆட்சியாளர்கள் வருவதற்கு இடம் வைத்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை. சேனாதிராசா அவர்கள் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த அரசாங்கம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணத்தவறினால் எங்களுக்கு சர்வதேசம் உதவி செய்யும் என்பதும் அவரின் உரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுத்தால் அது பொல்லாத ஆட்சியினர் வருவதற்கு வழிவகுக்கும் என்பது மாவை.சேனாதிராசாவின் கருத்து. இக் கருத்து எந்தவகையிலும் அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கமுடியாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவே இதனைக் கொள்ளவேண்டும்.
அப்படியானால் நல்லாட்சி நிலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக்கூடாது என்பது அவரின் கருத்தெனப் பொருள் கொள்ள முடியும்.
இந்த அரசாங்கத்தை நல்லாட்சி என்று நாம் கூறுவது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று. இந்த அரசாங்கம் நல்லாட்சியா இல்லையா என்பதை அதன் ஆட்சிக்கால நிறைவிலேயே சொல்ல முடியும்.
எனினும் நல்லாட்சி என்ற சொற்பதம் வழக்கத்திற்கு வந்து விட்டது. அதிலும் நல்லாட்சி என்பது யுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் சொல்லமுடியுமேயன்றி யுத்தத்தால் பாதிப்புக் குள்ளானவர்கள் இதனை நல்லாட்சி என்று சொல்வார்களா? என்பதை பொறுத்தும் நல்லாட்சி என்ற பதம் பயன்படுத்தக்கூடியது.
எது எவ்வாறாயினும் தங்கள் சொந்த நிலங்களை படையினரிடம் பறிகொடுத்து விட்டு இரவல் இடங்களில் தங்கள் வாழ்க்கையை கழிப்போர், காணாமல்போன தங்கள் உறவுக ளைத் தேடுவோர், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் உறவுகள் என யாரும் இவ் அரசை நல்லாட்சி என்று கூற மறுப்பர்.
இதற்கு காரணமும் உண்டு. அதாவது போரி னால் தமக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்திக்காத அரசை நல்லாட்சி என்று சொல்வதற்கு அவர் கள் ஒருபோது உடன்படமாட்டார்கள் என்பது நியாயமானதே.
எனவே ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரின் அரசாட்சி நல்லாட்சியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இது ஒருபுறம் இருக்க நல்லாட்சிக்கு இது வரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத் ததான தகவல்கள் எதுவும் இல்லை.
அழுத்தம் கொடுத்தால் நல்லாட்சி போய்விடும் என்றால் அழுத்தம் கொடுக்காமல் தமிழ் மக்கள் தாம் அனுபவிக்கின்ற அவலங்களோடு தொடர்ந்தும் வாழவேண்டும் என்று பொருள் கொள்வதிலும் தவறிருப்பதாக தெரியவில்லை.
எங்களை ஏமாற்ற நினைத்தால் மகிந்த ராஜபக்சவிற்கு நேர்ந்த கதிதான் இந்த அரசுக்கும் ஏற்படும் என்பது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரின் கருத்து.
அதேவேளை இலங்கை அரசு ஏமாற்ற நினைத்தால் சர்வதேசத்துடன் ஒரு உடன்பாட்டிற்கு நாம் வர நேரிடும் என்று மாவை.சேனாதிராசா அவர்கள் புங்குடுதீவில் ஆற்றிய உரை நல்லாட்சிக்கான எச்சரிக்கை.
இவையெல்லாம் சரி. இப்போது நமக்கு ஏற் படுகின்ற சந்தேகம், நாம் அழுத்தம் கொடுத்து பொல்லாத ஆட்சி வந்தால் அவர்களை சர்வதேசம் பார்த்துக்கொள்ளாதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் சர்வதேசத்துடன் உடன்பாட்டிற்கு வரமுடியாதா? என்பது தான்.
அட, நல்லாட்சிக்கான அழுத்தம் என்பது தமிழ் மக்கள் இப்போது நடத்துகின்ற தொடர் போராட்டங்கள் மட்டுமே. இந்தப் போராட்டங்கள் எங்கள் அரசியல் தலைமைக்கு இடைஞ்சலாக இருக்கிறதோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.