முதல்வர் – ஆளுநர் மோதல் வெடித்தது!

C.V.-Wigneswaran copy

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையே கடந்த சில தினங்களாக அதிகார இழுபறி ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் வழங்கிய அதிகாரிகளின் இடமாற்றல்களே இந்த இழுபறியைத் தோற்றுவித்துள்ளன.
முதலமைச்சரின் செயலாளரையும் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் இடம்மாற்றிவிட்டார். இதனால் பொங்கியெழுந்த முதலமைச்சர் ஆளுநரின் பணிப்புக்கமைய இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் நேற்றுமுன்தினம் அவசர அவசரமாக அறிவித்தார். இதனால் வடக்கு மாகாண சபை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாது திணறிப் போயுள்ளனர்.
வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக இருந்த திருமதி ரூபினி வரதலிங்கத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் செயலாளராகவும், வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர சி.ஏ.மோகனதாஸையும் வடக்கு மாகாண ஆளுநர் கூரே நியமித்திருந்தார்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் கடந்த வாரம் வழங்கப்பட்டி ருந்தது. முதலமைச்சர் அமைச்சின் செயலராகப் பதவி வகிக்கும் திருமதி வி.கேதீஸ்வரனை அதே அமைச்சில் மூத்த உதவிச் செயலராக நியமித்தும் ஆளுநர் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனை அடுத்தே முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இழுபறி ஆரம்பித்துள்ளது. தனது அமைச்சுக்கான செயல◌ாளரை அந்தப் பதவியில் இருந்து தூக்குவதற்கும் அந்த இடத்திற்குப் புதியவர் ஒருவரை நியமிப்பதற்கும் முன்னர் தன்னோடு கலந்தாலோசிக்கப்படவில்லை என்று முதலமைச்சர் கொதித்துப் போயுள்ளார்.
ஆளுநர் இவ்வாறு தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கருதுகிறார். இதனாலேயே ஆளுநரால் மாற்றங்கள் வழங்கப்பட்ட மூவரையும் புதிய நியமனங்களை ஏற்கவேண்டாம் என்று முதலமைச்சர் கேட்டுள்ளார்.
இது ◌தொடர்பான கடிதங்கள் முதலமைச்சர் அலுவலகத்தால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அந்தக் கடிதத்தில், வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த நியமனங்கள் தொடர்பில் தான் பேச்சு நடத்த உள்ளார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதுவரை ஆளுநரினால் வழங்கப்பட்ட நியமனங்களை ஏற்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.
எனினும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அவர்களது தர நிர்ணயத்திற்கு ஏற்ப பதவி ஒதுக்கீடுகளை வழங்க வடக்கு மாகாண சபை தவறியிருப்பதே ஆளுநர் இந்த விடயத்தில் மூக்கை நுழைப்பதற்கான தேவையை ஏற்படுத்தியது என்று ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் அவர்களது சேவை மூப்பு அடிப்படையிலேயே நாடு முழுவதும் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால், வடக்கு மாகாண சபையில் அந்தத் தர நிர்ணயம் பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கூட்டமைப்பின் அமைச்சர்கள் தம்மோடு ஒத்திசைந்து போகக்கூடியவர்களையே தமது அமைச்சுக்களின் செயலாளர்களாகவும் திணைக்களங்களின் தலைவர்களாகவும் நியமிக்க விரும்புகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே உண்டு.
மகிந்தவின் காலத்தில் ஆளுநராக இருந்தவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தனக்கு வேண்டிய விதத்தில் அதிகாரிகளைத் தூக்கிப் பந்தாடி வந்தார். சரியான, தெளிவான காரணங்கள் இன்றி அவரது உத்தரவின் பேரில் இரவோடு இரவாக அதி◌காரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றதும் இந்த நிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
பதவி நிலையில் சேவை மூப்பு அதிகாரிகள் பலர் இருக்கத்தக்கதாக மிக இளநிலையில் இருந்தவரான பற்றிக் நிரஞ்சன் வடமாகாண விவசாய அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது அரச தாபன விதிக் கோவைக்கு முரணானது. நீண்ட இழுபறியின் பின்னர் மிக அண்மையிலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். ஆளுநரே அந்த இடமாற்றத்தையும் வழங்கினார்.
அதுபோன்றே முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக இருப்பவரிலும் பார்க்க சேவை மூப்புடைய அதிகாரிகள் வடக்கு மாகாணத்தில் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் பதவிகள் வழங்கப்படாமல் அல்லது அவர்களது தரத்துக்குக் குறைந்த பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்படியிருக்கத்தக்கதாக முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக நிர்வாக சேவைத் தரநிலையில் இரண்டாம் இடத்தில் (கிளாஸ் வன்) உள்ளவரான திருமதி வீ.கேதீஸ்வரன் பதவியில் உள்ளார்.
அவர் சேவையில் இணைந்ததன் அடிப்படையில் தற்போது நிர்வாக சேவையின் முதல் இடத்தில் (ஸ்பெசல் கிளாஸ்) இருக்கவேண்டியவர் என்றாலும் சில காரணங்களால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரது பதவியில் நிர்வாக சேவையின் முதல் இடத்தில் இருக்கக்கூடிய அதிகாரி ஒருவரே இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டது.
இது தவிர நிர்வாக சேவைக்கு உரிய பதவிகளில் வேறு சேவைகளைச் சேர்ந்தவர்களும் நீண்ட காலமாக அமர்ந்துள்ளனர். அவர்களை அந்தப் பதவிகளில் இருந்து அகற்றி நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிப்பதற்கும் அமைச்சர்கள் சிலர் தடையாக இருக்கின்றனர். இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவே ஆளுநர் இந்த விடயத்தில் நிலமையை நேர் சீர் செய்ய வேண்டியேற்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila